பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கிராமமொன்றில் இளைஞர் ஒருவரை கடத்திவந்து துப்பாக்கி முனையில் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
பாட்னாவில் உள்ள மொகாமா எனும் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த பினோத் என்ற இளைஞரைத்தான் கடத்திவந்து துப்பாக்கி முனையில் பெண் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். பினோத்தின் குடும்பத்தினரையும் அந்த வீடியோவில் உள்ளவர்கள் மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அந்த இளைஞரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞரை கடத்துவதில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் உள்ளூரில் பலம்பொருந்திய சுரேந்திர யாதவ் என்பவரை நினைத்து அந்த இளைஞரின் குடும்பத்தினர் பயப்படுவதாக கூறப்படுகிறது.
அந்த விடியோவில் இளைஞர் வினோத், அழுதுகொண்டே தனக்கு முன்பின் தெரியாத பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார்.