காஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் தலையீடு தேவையில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய பங்காற்றி இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதற்கு சீனா ஆர்வமாக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜிங் சுவாங் தெரிவித்திருந்தார்.
சீனாவின் இந்த கருத்தையடுத்து இந்தியா இதற்கு பதிலளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவின் தலையீடு தேவையில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள இந்த பிரச்சனையில் 3-வது நாடு தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்பது தான் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் முடிவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.