உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்நூர் மாவட்டத்தில் இஸ்லாமாபாத் எனும் கிரமாம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வேற்று ஜாதியை சேர்ந்த பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் காதலித்ததால், அந்த வாலிபரின் குடும்பத்தாருக்கு ஷூ மாலை அணிவித்து, அப்பெண்ணின் வீட்டார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அந்த வாலிபரின் பெற்றோர், அவரின் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து அவர்களுக்கு ஷூ மாலை அணிவித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து வெளியான தகவலின்படி, அந்த காதல் ஜோடி சில மாதங்களுக்கு முன் ஊரை விட்டு வெளியேறி இருக்கிறது. சமீபத்தில், அந்த வாலிபரின் இளைய சகோதரரும், அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை காதலித்து இருக்கிறார். இதனால், காதல் செய்த அந்த குடும்பத்திற்கு பாடம் கற்பிக்கும் பொருட்டு, இதுபோன்று அவர்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த வாலிபரின் சகோதரர் போலீசில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.