குஜராத் சட்டப்பேரவைக்கு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் மொத்தமாக பதிவாகியுள்ளன. சௌராஷ்டிரா - குட்ச் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள 89 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மோர்பி மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் அதிகபட்சமாக 75% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், மோர்பி மாவட்டம் செராமிக் தொழிற்சாலை நிறைந்தவையாகும். மேலும், பத்திதார் சமூக மக்கள் இந்த மாவட்டத்தில் அதிகம் உள்ளனர்.
சூரத்தில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சௌராஷ்டிராவில் மோர்பி, கிர் சோம்நாத், சுரேந்திரநகர் ஆகிய தொகுகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சௌராஷ்டிரா - குட்ச் மற்றும் தெற்கு குஜராத் அடங்கிய முதல்கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் ஆர்வமாக வாக்களித்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், பாஜக அனைத்து சாதனைகளையும் முறியடித்து வெற்றி படைக்கும் என கூறினார்.
மொத்தம் 26,865 மின்னணு வாக்கு இயந்திரங்களில் 0.37 சதவீத இயந்திரங்கள், வாக்குப்பதிவின்போது கோளாறானதாகவும், அதற்கு பதிலாக வேறு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, போர்பந்தரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், மின்னணு வாக்கு இயந்திரம் புளூடூத் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் புகார் அளித்தது. இதையடுத்து, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் உதவியுடன் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இதையடுத்து, வாக்குச்சாவடி முகவர் ஒருவரின் புளூடூத் சிக்னல்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சூரத்தில் சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் சரிவர இயங்கவில்லை என புகார்கள் எழுந்தன.
சூரத் மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 88,000 பேர் முதல்முறை வாக்காளர்களாவர்.