குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தலித் சமுதாய மக்களுக்காக போராடிவரும் ஜிக்னேஷ் மேவானி, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 18-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தலித் சமுதாய மக்களுக்காக போராடி வரும் ஜிக்னேஷ் மேவானி, சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பனாஸ்கந்தா மாவட்டத்தின் வட்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
“நண்பர்களே, பனாஸ்கந்தா மாவட்டத்தின் வட்கம்-11 தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். நாம் போராடுவோம், வெற்றிபெறுவோம்”, என தன் ட்விட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் மேவானி பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கூட்டணிக்கு அழைப்பது காங்கிரஸாகவே இருந்தாலும் தான் கூட்டணி அமைக்கமாட்டேன் என ஜிக்னேஷ் மேவானி கூறியிருந்தார்.
இந்நிலையில், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள அவர் தனக்கும் பாஜகவுக்கும் மட்டுமே நேரடி போட்டி நிலவ வேண்டும் எனவும், அதனால் வேறு கட்சிகள் யாரும் வேட்பாளர்களை களமிறக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.