மாமல்லபுரத்தில் நடைபெறும் ராணுவ தளவாடக் கண்காட்சியில் பங்கேற்க இன்று மோடி சென்னை வந்துள்ளார். இந்த வருகையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த எதிர்ப்பைப் போராட்டக்காரர்கள் இணையதளத்திலும் #GoBackModi என்ற ஹாஷ்டேக் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த ஏப் 1ம் தேதியில் இருந்து போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. மத்திய அரசைக் கண்டித்து ஏப் 3ம் வணிகர் சங்கத்தினர் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். பின்பு, ஏப் 5ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் ஏப் 7ம் துவங்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இது போன்ற போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ராணுவ கண்காட்சிக்கு பிரதமர் மோடி வருவதை எதிர்க்கட்சிகள் எதிர்த்தனர். தமிழகத்திற்கு வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிட கழகம் உட்பட பலரும் அறிவித்திருந்தனர். நேற்று தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் பாரதிராஜா, அமீர், சீமான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் மெற்றும் விமான நிலையம் முற்றுகையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், “தமிழர்களுக்குத் துரோகம் செய்த மோடி இங்கு வரக் கூடாது. தடுக்கப்பட வேண்டும்.” என்றும் பாரதிராஜா தெரிவித்தார்.
பதற்றமான சூழல்களை மீறி இன்று தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். அவரின் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்டியும், ‘திரும்பிப் போ மோடி’ என்ற முழக்கங்கள் எழுப்பியும் போராட்டம் நடைபெற்றது. ஆலந்தூரில் இந்தப் போராட்டம் துவங்கியது. பின்னர் விமான நிலையம் முற்றுகையிடும் முயற்சியும் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, அமீர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மோடிக்கு வெளியான எதிர்ப்புகள் போராட்டத்தில் மட்டுமில்லாமல், இணையதளத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், இதற்கு நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி, தமிழகத்தில் இருந்து உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் மக்கள் தங்களின் எதிர்ப்புகளை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதற்கான சாட்சிதான் இந்திய அளவில் பிரபலமாகி இருக்கும் #GoBackModi ஹாஷ்டேக்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.