ஹரியானா மாநிலம் ரிவாரியில் பள்ளி மாணவிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தினால், உயர் நிலைப் பள்ளியானது மேல் நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
ஹரியானா மநிலம் ரிவாரி மாவட்டத்தில் உள்ள கோத்ரா தப்பா தகினா கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளில் சுமார் 86 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 13 மாணவிகள் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகள் என்னெவென்றால், தாங்கள் பயின்று வரும் உயர் நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக உயர்த்துவதேயாகும். இதற்காக அந்த மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தில் இறங்கினர்.
அந்த மாணவிகள் மேல் நிலைப் பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால், அண்டையில் உள்ள மற்ற கிராமத்திற்கு தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில், அந்த மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்ற மாநில அரசு, உயர் நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக மாற்ற முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டுவிட்டது.
இது தொடர்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவி ஒருவர் கூறியதாவது: "மேல் நிலைப்பள்ளியானது எங்கள் கிராமத்தில் இல்லை. எனவே நாங்கள் அருகில் இருக்கும் மற்றொரு கிராமத்திற்கு தான் சென்று மேல் நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால், அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்களால் எங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என பயமாக இருந்தது. இதன் காரணமாகவே எங்கள் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடினோம்" என்று கூறினார்.