ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி அப்துல் ரஷித் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். இவரது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவரது ஐந்து வயது பெண் சோஹ்ரா கதறி அழுத புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆனது.
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், சோஹ்ரா படிப்புச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கம்பீர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "சோஹ்ரா, என்னால் உனக்கு தாலாட்டுப் பாடி தூங்க வைக்க முடியாது. ஆனால், உனது கனவுகளை நிறைவேற்றுவதற்கு உன்னை எழுப்ப என்னால் உதவ முடியும். உனது வாழ்நாள் முழுவதும் உன் படிப்பிற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் இந்தியாவின் மகளே" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "சோஹ்ரா! உனது கண்ணீரை சிந்தாதே. உனது வலியை பூமி மாதாவால் கூட தாங்கிக் கொள்ள முடியாது. உனது தந்தைக்கு எனது வீர வணக்கங்கள்" என்றும் கம்பீர் ட்வீட் செய்துள்ளார்.
அனந்த்நாக் மாவட்டத்தின் மெஹந்தி கடல் பகுதியில் சோஹ்ராவின் தந்தை அபுல் ரஷித் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.