டெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 4 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு டெல்லியில் உள்ள கிட்டோர்னி எனும் பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை காலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 5 துப்புரவு தொழிலாளர்கள் அதற்குள் இறங்கினர். ஆனால், வெகுநேரமாகியும் அவர்கள் வெளியே வராத நிலையில் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தொழிலாளர்கள் மூர்ச்சையற்று கழிவுநீர் தொட்டியில் மயங்கியிருந்ததைக் கண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியில் மயங்கிக்கிடந்த 5 தொழிலாளர்களையும் வெளியே மீட்டனர். கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. அதன்பின், தொழிலாளர்களில் மூன்று பேர் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனைக்கும், இரண்டு பேர் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் நான்கு தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்வான் சிங், திப்பு, அனில், பல்விந்தர் ஆகியோர் உயிரிழந்தனர். ஜஸ்பால் மற்றும் ஸ்வான் சிங்கின் மகன் ஆகியோர் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 5 பேரும் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.