தெற்கு டெல்லியில் உணவுக்கடைகளில் அசைவ உணவுகளை வெளியே தெரியுமாறு காட்சிப்படுத்தக் கூடாது என, அம்மாநகராட்சி பாஜக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அசைவ உணவுகள் ஆரோக்கியமில்லாதது மற்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடியது என மாநகராட்சி நிர்வாகம் இந்த உத்தரவுக்கு விளக்கம் அளித்துள்ளது.
தெற்கு டெல்லி மாநகராட்சி பாஜக கைவசம் உள்ளது. இந்நிலையில், தெற்கு டெல்லியில் உள்ள உணவுக்கடைகளில் அசைவ உணவுகளை காட்சிப்படுத்தக் கூடாது என, பாஜக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தீர்மானத்திற்கு தெற்கு டெல்லிக்கு உட்பட்ட காக்ரோலா கிராமத்தின் கவுன்சிலர் ஒப்புதல் அளித்தார்.
அசைவ உணவுகளை கடைகளின் வெளியே காட்சிப்படுத்துவதால் மக்களின் உணர்வுகள் புண்படுவதாக, பாஜக எம்.எல்.ஏ. ஷிகா ராஜ் என்பவர் கூறியுள்ளார்.
சமைத்த மற்றும் சமைக்காத அசைவ உணவுகள் என இரண்டையும் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்மானம் இன்னும் மாநகராட்சி ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை. அதன்பின்னரே, இந்த விதிமுறை நடைமுறைபடுத்தப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்த முடிவுக்கு காங்கிரஸ் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.