டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காணாமல்போன மாருதி சுசுகி வேகன் ஆர் காரை, டெல்லி காவல் துறையினர் காசியாபாத்தில் மீட்டனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு பரிசாக வந்த நீல நிற வேகன் ஆர். காரையே பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தலைமை செயலகத்துக்கு வந்த முதலமைச்சர் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். இதன்பின், பணிகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக வந்தபோது அங்கு அவருடைய கார் இல்லை. இந்த காரைத்தான் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் காரை தேடும் பணியில் டெல்லி காவல் துறையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் மிகவும் மோசமடைந்திருப்பதையே இந்த சம்பவம் உணர்த்துவதாக, டெல்லி ஆளுநர் அனில் பைஜால் மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். “என்னுடைய கார் காணாமல்போனது சாதாரண விஷயம். ஆனால், தலைமை செயலகத்தின் வெளியே திருடப்பட்டிருகிறது. இது, சட்ட - ஒழுங்கு பிரச்சனைகள் மிகவும் மோசமடைந்திருப்பதையே காட்டுகிறது. முதலமைச்சருக்கே இந்த கதியென்றால், பொதுமக்கள் அரசிடமிருந்து என்ன எதிர்பார்ப்பார்கள்?”, என கூறியிருந்தார்.
இந்நிலையில், காணாமல் போன வேகன் ஆர் காரை டெல்லி காவல் துறையினர் காஸியாபாத்தில் சனிக்கிழமை மீட்டனர். நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், காஸியாபாத் மோகன் நகரில் அந்த காரை காவல் துறையினர் மீட்டனர்.