ராஜஸ்தானில் கணவனை இழந்த தன் தாய்க்கு மணமகன் தேடி இரண்டாம் திருமணம் செய்துவைத்துள்ள மகளை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் கீதா அகர்வால் (வயது 53). இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் இவரது கணவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இது அவருக்கு மன உளைச்சலை தந்தது. இந்நிலையில், அவரது மகள் சன்ஹிடா பணி காரணமாக வேறு ஊருக்கு சென்றுவிட்டார். இது கீதா அகர்வாலை தனிமையில் ஆழ்த்தியது.
இதனால் தன் தாய்க்கு இரண்டாம் திருமணம் செய்ய சன்ஹிடா முடிவெடுத்து, அவரது விவரங்களை மேட்ரிமோனியல் இணையத்தளத்தில் பதிவேற்றினார். இதற்கு, கீதா அகர்வாலும், உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், சன்ஹிடா தன் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, மேட்ரிமோனியல் மூலம் குப்தா (வயது 55) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு மனைவியை இழந்தவர். தன் நண்பர்களின் விருப்பப்படி இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனியல் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவர் சன்ஹிடாவை தொடர்புகொண்டு, அவரது தாயை திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் கீதாவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அச்சமயத்தில், குப்தா மூன்று நாட்கள் கீதாவுடன் உடனிருந்தார். இதனால், கீதா திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார். இதையடுத்து, அவர்களுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.