டெல்லி காவல் துறையினர் பாலியல் தொழில் நடத்துபவர்கள் போல் நடித்து, ரூ.3.5 லட்சத்துக்கு விற்கவிருந்த
15 வயது சிறுமியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பீகாரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு, பாலியல் தொழில் கும்பலிடம் சிக்கி டெல்லியில் அத்தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அச்சிறுமியை வேறொரு பாலியல் தொழில் கும்பலுக்கு விற்று பணம் பார்க்கும் எண்ணத்தில் இருந்திருக்கிறது அக்கும்பல்.
இந்த நிலையில், அச்சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த கும்பல், ரூ.3.5 லட்சத்துக்கு விற்க முடிவு செய்து இடைத்தரகர்களை அணுகியுள்ளது. இந்த நிலையில் தான், இக்கும்பல் டெல்லி கமலா மார்க்கெட் காவல் நிலைய போலீஸ் ஒருவரை பாலியல் தொழில் நடத்தும் கும்பலை சேர்ந்தவர் என தவறாக எண்ணியுள்ளது.
இதனை புரிந்துகொண்ட அந்த போலீஸ் தன்னை பாலியல் தொழில் கும்பலை சேர்ந்த ஒருவராக அக்கும்பலிடம் காட்டிக்கொண்டுள்ளார். மேலும், அச்சிறுமியை வாங்கவும் சம்மதித்துள்ளார். அந்த கும்பலை சேர்ந்த இருவரிடமும், இரண்டு முறை சந்தித்து போலியாக பேரம் பேசியிருக்கிறார் அந்த போலீஸ்.
இதையடுத்து, அச்சிறுமியை வாங்குபவர்கள் போல் நடித்த டெல்லி காவல் துறை, ரயில் நிலையத்தில் வைத்து
அக்கும்பலை சேர்ந்த இருவரையும் கைது செய்தது. மேலும், அச்சிறுமியை மீட்டு பெற்றோர்களிடமும் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பீகாரை சேர்ந்த அமர் (வயது 24), ரஞ்சித் ஷா (வயது 27) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.