அசாமைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர், 'தேசத்தந்தை' என அழைக்கப்படும் மகாத்மா காந்தியையும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவையும் குப்பையோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இதுகுறித்து ஜோர்ஹத் தொகுதி மக்களைவை உறுப்பினர் கமக்யா பிரசாத் தாசா பேசுகையில், "பல வருடங்களாக நேரு-காந்தி என்ற குப்பைகளை மக்கள் மனதில் காங்கிரஸ் திணித்து வருகிறது. இனிமேலும் அதை திணிக்க இங்கு இடமில்லை. அந்த கதைக்கும் இடமில்லை" என்றார். கடந்த சனிக்கிழமை சிவ்சாகர் மாவட்டம் சோனாரியில் நடைபெற்ற பொது பேரணியில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த எம்பியை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அந்த எம்.பி. இது போன்ற பேசிய போது, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் அங்கு மேடையில் தான் அமர்ந்திருந்தார்.
இந்தநிலையில், நேற்று (ஞாயிறு) மாநிலம் முழுவதும் பாஜக எம்.பி.க்கு எதிராக அசாம் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதனால், குவஹாத்தி காவல் நிலையத்தில் அந்த எம்.பி. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எஃப்ஐஆரில், "அந்த எம்.பி.... மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் குப்பை என்று கூறியுள்ளார். இதனால், அவரை உடனடியாக கைது செய்ய வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா கூறுகையில், "நேருவையும், காந்தியையும் குப்பையுடன் ஒப்பிட்டது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இந்த மிகப்பெரிய குற்றத்தை செய்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.