சிபிஎஸ்இ பள்ளியின் பிளஸ் 2 வினாத்தாள் டெல்லியில் இன்று காலை வாட்ஸ் அப்பில் வெளியானது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கு பொதுத்தேர்வுகள் அண்மையில் தொடங்கின. இன்று (15.3.18) பிளஸ் 2 வகுப்பிற்கான கணக்குப்பதிவியல் (accountancy) பிரிவில் தேர்வு நடைப்பெற்று வருகிறது.
இந்த தேர்விற்கான வினாத்தாள் டெல்லியில் நேற்று இரவு முதலே, வாட்ஸ் அப்பில் பரவ தொடங்கியுள்ளது. மேலும், இன்று காலை அங்குள்ள மாணவர்கள் பலருக்கும் இந்த கேள்வித்தாள் ஃபோட்டோவாக வாட்ஸ் அப்பில் வந்துள்ளது. ஏற்கனவே, சி.பி.எஸ்.இ 6 ம் வகுப்பு சமூகவியல் வினாத்தாளில் சாதி பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் , தற்போது பிளஸ் 2 வினாத்தாள் வாட்ஸ் அப்பில் பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து டெல்லி கல்வி துறை அமைச்சர் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”பிளஸ்2 வினாத்தாள் ஒன்று வாட்ஸ் அப்பில் கசிந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுக் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். யார் இதுப் போன்ற செயலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கஷ்டப்பட்டு படித்த மாணவர்கள் இதுக் குறித்து கவலைப்பட வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.
,
மேலும், வாட்ஸ் அப்பில் வெளியான வினாத்தாளும், இன்று மாணவர்களுக்கு தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளும் ஒன்று தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.