மத்திய பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட், விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு நன்மைபயக்கக் கூடியதாக இருக்கும் என, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மேலும், இந்த பட்ஜெட் இந்தியாவின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தும் என மோடி கூறினார். அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தபின் பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்த பட்ஜெட்டால் தொழில் முனைவது எளிமையாக்கப்படும் என மோடி கூறினார். ஏழைகளுக்கான புதிய சுகாதார காப்பீடு திட்டம், மூத்த குடிமக்கள் மற்றும் சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் செய்யப்பட்டுள்ள சில தளர்வுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இத்தகைய பட்ஜெட் மூலம் தன்னுடைய புதிய இந்தியா கனவு வலுப்பெறுவதாகவும், பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை இரட்டிப்பாக்கும் அருண் ஜெட்லியின் அறிவிப்பை மோடி குறிப்பிட்டு பாராட்டினர். அதன்மூலம், விவசயிகள் பெருமளவில் பலனடைவர் என மோடி தெரிவித்தார்.
மேலும், ‘தூய்மை இந்தியா’ திட்டம் மூலம் கழிவறைகள் கட்டுதல், ஸ்மார்ட் சிட்டி திட்டம், மின்சாரம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவற்றில் அருண் ஜெட்லி அறிவிப்புகளால் பல கோடி பேர் பயனடைவர் என மோடி தெரிவித்தார்.