தெலங்கானா மாநிலத்தில் தன்னுடைய நிலத்தை தலித் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்த வேறு சமூக பெண்ணை கிராமத்தினர் ஒதுக்கிவைத்ததோடு மட்டுமல்லாமல், அவரை துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள மல்லாரம் கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா (வயது 50). இவர் தன்னுடைய விவசாய நிலத்தை தலித் சமூகத்தை சேர்ந்த லஷ்மி என்பவருக்கு கடந்த ஜூன் மாதம் குத்தகை விட்டிருக்கிறார். அப்போது, லஷ்மிக்கு நிலத்தை குத்தகை விட்டதை திரும்ப பெறுமாறு, இந்திராவின் சமூகத்தினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்திரா தன் முடிவில் உறுதியாக நின்றார்.
இந்நிலையில், லஷ்மி அந்நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், அவரது பயிர்களை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தினர். இதையடுத்து, இந்திராவின் சமூகத்தினர்தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டி, லஷ்மி எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். லஷ்மிக்கு இந்த வழக்கில் இந்திரா உறுதுணையாக இருந்தார். இது, இந்திராவின் கிராமத்தினரை மேலும் கோபம் கொள்ள வைத்தது.
இதையடுத்து, இந்திராவை அவர்கள் முழுவதுமாக ஒதுக்கி வைத்தனர். இந்திராவிடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தினர். அதுமட்டுமல்லாமல், எந்தவொரு சுப காரியங்களுக்கும், நிகழ்வுகளுக்கு இந்திராவை அவர்கள் அழைப்பதில்லை. இந்திராவுடன் பேசுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதத்தையும் அச்சமூகத்தினரின் சங்கம் விதித்தது. “என் வீட்டுக்கு வரும் என் உறவினர்கள் மீது ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு, இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், கிராமத்தில் ஆதிக்கம் செலுத்தும் தங்கள் சமூகத்தினருக்கு ஆதரவாகவே செயல்படுவதாக இந்திரா குற்றம்சாட்டுகிறார்.
“புகார் அளித்து இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.”, என இந்திரா கூறினார்.