பீகார் மாநிலத்தில் நடந்த 2 சட்டசபைகளுக்கான இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் பாஜகவும், ஒரு தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளன. அராரியா மக்களவைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஜெஹனாபாத், பபுவா சட்டசபை மற்றும் அராரியா மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் ஜெஹனாபாத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளமும் (லாலு பிரசாத் யாதவ் கட்சி), பபுவா தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.
ஜெஹனாபாத் சட்டசபைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.,வான முந்திரிகா யாதவ் மரணம் அடைந்ததை முன்னிட்டு, அங்கு தேர்தல் நடந்தது. அவரது மகன் குமார் கிருஷ்ண மோகன், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பபுவா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.,வாக இருந்த ஆனந்த் பூஷண் பாண்டே மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு அவரது மனைவி ரிங்கி ராணி பாண்டே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஆராரியா மக்களவைத் தொகுதியின் ராஷ்டிரியா ஜனதா தளம் எம்.பி.,யான மொஹம்மது தஸ்லிமுதின் மரணத்தைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், மொஹம்மது தஸ்லிமுதின் மகன் சராஃபரஸ் அலாம் மற்றும் பாஜக வேட்பாளர் பிரதிப் சிங் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் சராஃபரஸ் 50,9334 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.