கொல்கத்தா உயர் நீதிமன்றதில் பிச்சைக்காரர் ஒருவர் வங்கிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பிச்சைக்காரர் காஞ்சன் ருய் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.1, ரூ.2 நாணயங்களால் எனக்கு பெரிய பிரச்னை ஏற்படுகிறது. அந்த நாணயங்களை வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டுகளை தர வங்கிகள் மறுக்கின்றன. இதனால், என்னிடம் ஏராளமான நாணயங்கள் குவிந்து விட்டன. எனது தொழிலும் பாதிப்படைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) நிஷிதா மாத்ரே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒரு ரூபாயில் இருந்து அனைத்து நாணயங்களும் செல்லும். மனுதாரர் எந்த வங்கியையோ, கிளையையோ குறிப்பிட்டு கூறவில்லை" என்று வாதாடினார்.
இதையடுத்து, எந்த குறிப்பிட்ட வங்கியையும் மனுதாரர் பிரதிவாதியாக சேர்க்காததால், இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு, கூடுதல் விவரங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு காஞ்சன் ருய்-க்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.