கடைசி காலத்தில் தன் குடும்பத்தால் தனித்துவிடப்பட்டு நிர்க்கதியாக நின்ற மூதாட்டி, பிச்சையெடுத்து சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை கோவில் ஒன்றுக்கு நிதியுதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர் எம்.வி.சீதா (வயது 85). வயதான இவரை, குடும்பத்தினர் ஏமாற்றி வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர். இதையடுத்து, சீதா அருகிலுள்ள பிரசன்ன ஆஞ்சநேய கோவிலில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிச்சை எடுத்ததன் மூலம் தான் சேர்த்து வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சத்தை பிரசன்ன ஆஞ்சநேய கோவிலுக்கு நிதியுதவி செய்தார். அக்கோவிலில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மூதாட்டி கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த பணத்தை கோவில் நிர்வாகம் வாங்க மறுத்துள்ளது. ஆனால், குடும்பம் தன்னை கைவிட்டபோதும், பிரசன்ன சுவாமி கைவிடாததால் கோவிலுக்கே பணத்தை தருகிறேன் என பிடிவாதமாக கூறி ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து, மூதாட்டி சீதாவுக்கு உடல் ஆரோக்கியம் பெற்று, நீண்ட ஆயுளை பெறும்படி சிறப்பு பூஜை நடத்தி பிரசாதம் வழங்கினர்.