அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
அமர்நாத் யாத்திரை சென்று விட்டு குஜராத் மாநில யாத்ரீகர்கள், ஜம்முவுக்கு கடந்த 10-ம் தேதி இரவு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பேருந்து அனந்தநாகின் கானாபால் எனுமிடதுக்கு வந்த போது, அதன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் ஆறு பேர் உள்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த பெண்ணுடன் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பு தன் காரணம் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த அந்த லஷ்கர் இயக்க தீவிரவாதி அபு இஸ்மாயிலை கைது செய்யும் பொருட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் மூன்று பேருடன் இணைந்து இந்த தாக்குதலை இஸ்மாயில் நடத்தியிருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ள ஜம்மு - காஷ்மீர் போலீசார், அதில் இரண்டு பேர் உள்ளூர் வாசிகளாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.