மனிதர்களுக்கிடையே அன்பு, பாசம், இரக்கம் ஆகிய உணர்வுகள் அறவே ஒழிந்துவிட்டனவா என கேட்க தோன்றும் அளவுக்கு ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் நடைபெற்றது. ஒருபுறம் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவருக்கு ஆதரவாக கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மற்றொரு புறத்தில், தான் கர்ப்பமானதால், அதற்கு காரணமானவரும், தன் குடும்பமும் அப்பெண்ணை புறக்கணித்துவிட்டதால், 17 வயது இளம்பெண் நடுரோட்டில் குழந்தை பெற்ற துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலா - கார்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியை சேர்ந்த ஆணுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண் கர்ப்பமாகிவிடவே, அதனை அந்த இளைஞரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த இளைஞர் பிரியாவை புறக்கணித்திருக்கிறார். மேலும், இந்த விஷயத்தை அறிந்த பிரியாவின் குடும்பத்தினர், மற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால் குடும்ப கௌரவத்திற்கு இழுக்கு என கர்ப்பிணியான பிரியாவை வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, அப்பெண் வேறு வழியின்றி சாலையிலேயே படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி இரவு ஏழு மணியளவில் பிரியாவுக்கு பிரசவ வலி ஆரம்பித்தது. இதையடுத்து, அவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். ஆனால், அவருடன் வேறு யாரும் வராததால் மருத்துவமனையில் ஊழியர்கள் சேர்க்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
வாகனங்களின் மத்தியில் குழந்தை பெறும் பெண்.
இதையடுத்து மறுநாள் காலை ஐந்து மணியளவில், அந்த மருத்துவமனைக்கு சற்று தூரம் தள்ளி பிரியா நடுரோட்டிலேயே, வாகனங்களின் மத்தியில் பெண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதையடுத்து, அவ்வழியாக சென்ற ஓம் பிரகாஷ் சர்மா என்பவர் அப்பெண்ணின் நிலையைக் கண்டார். அப்போது, குழந்தையின் தொப்புள் கொடி கூட துண்டிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, அவர் காவல் துறைக்கு தகவல் அளித்தபின்பு, பிரியா மற்றும் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.