‘கறுப்புப்பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். இனியும் கந்துவட்டிக் கொடுமை தொடரக்கூடாது’ என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
சினிமா இணை தயாரிப்பாளரான அசோக் குமார், கந்துவட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், “நமக்குத் தெரிந்தே நடந்த தற்கொலை இது. நமக்குத் தெரியாமல் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் வாங்கித்தான் படம் எடுக்கிறோம். ஆனால், இனியும் கந்துவட்டிக் கொடுமை தொடரக்கூடாது.
திரையுலகில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் மட்டும்தான். கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். விவசாயிகளைப் போல் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தயாரிப்பாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்த் திரையுலகில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.