'புரட்சித் தளபதி' என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் விஷால், தனது அரசியல் நிலை குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் தனது தங்கையின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார் விஷால். செலவு செய்ததில் பிரம்மாண்டம் என்பதை விட, தமிழகத்தில் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் பல முக்கிய புள்ளிகளையும் தனது தங்கை திருமணத்திற்கு அழைத்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் டிடிவி தினகரன் வரை பாரபட்சம் இல்லாமல், அனைவருக்கும் திருமணம் அழைப்பிதழ் கொடுத்து அசரடித்தார்.
தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் விஷால் பதவி வகிக்கிறார். இதனால், அவர் எதிர்காலத்தில் தமிழக அரசியலில் நுழைவார் என பரவலாக பேசப்படுகிறது. இதை அவர் இதுவரை மறுத்ததும் இல்லை. எனவே, அவரைச் சுற்றி பல சர்ச்சையான கருத்துகளும் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக இயக்குனர் சேரன், 'அனைத்திலும் தலைமை பொறுப்பு வகிக்க விஷால் நினைக்கிறார். அது மிகவும் தவறு' என கடுமையாக விஷாலை சாடியிருந்தார்.
இந்தநிலையில், இணையதளம் ஒன்றிற்கு விஷால் அளித்துள்ள பேட்டியில், "நல்லது செய்வதற்கு அதிகாரம் தேவை, அந்த அதிகாரத்திற்கு பெயர் 'அரசியல்' என்றால்... ஆம்! நான் அரசியலுக்கு வருகிறேன்" என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நான் நல்லது செய்வதை என்றும் நிறுத்த மாட்டேன். அதில் தொடர்ந்து ஈடுபடுவேன். ஆனால், அரசியலுக்காகவே நான் நலப்பணிகள் செய்வதாக தவறாக சொல்லப்படுகிறது" என்றார்.
தொடர்ந்து இலவச கல்வி மற்றும் மருத்துவம் குறித்து விஷால் கூறுகையில், "ஒரு விஷயத்தை நமது அரசியல்வாதிகள் இந்த நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவதற்கு பதிலாக ஏன் அரசாங்கம் தனது பள்ளிகளை தனியார் மயமாக்கக் கூடாது? அப்படி செய்தால், என்னைப் போன்றோர் அதை எடுத்து நடத்த முடியும். இதனால், நமது பிள்ளைகள் தரமான கல்வியைப் பெற்று, எதிர்காலத்தில் மிகச் சிறந்த தலைவர்களாக உருவாக முடியும்" என்றார்.