மௌன ராகம் தான் ராஜா ராணி, சத்ரியன் தான் தெறி அப்ப இந்த படம் எதோட ரீமேக்காக இருக்கும் என்று விஜய் அட்லீ படம் பற்றி யோசித்தவர்கள் வாய்க்கு ஒரு அவல் கிடைத்து விட்டது.
அப்பாவையும் அம்மாவையும் வில்லன் கொன்று விடுவான். பிறக்கும் இரட்டையர்களில் ஒருவர் வில்லனைப் பற்றி தெரிந்து கொண்டு பழி வாங்க சபதம் எடுப்பார். இன்னொருவர் வில்லன், பழி வாங்கல் பற்றி எதுவுமே தெரியாமல் அந்த பழி வாங்கலில் வந்து அப்பாவியாக மாட்டிக்கொள்வார். அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம் உட்பட பல படங்களின் கதை முடிச்சு தான் இது. இந்தக் கதையைத் தான் தூசி தட்டி எடுத்து வருகிறாராம் அட்லீ.
இதற்குள் மருத்துவமனைகளின் கொள்ளை, உறுப்பு திருட்டு, ஒரு விஜய் அப்பாவை கொன்ற அப்பாவின் நண்பன் மருத்துவமனையிலேயே மருத்துவராக பணிபுரிவது, இன்னொரு விஜய் மேஜிஷியனாக இருந்துகொண்டு அப்பாவைக் கொன்றவனை பழி வாங்குதல் என்று மசாலாவைத் தூவி இருக்கிறார்களாம். ராஜமௌலியின் ஃபேவரிட் திரைக்கதை ஆசிரியரான விஜயேந்திர பிரசாத் தான் இந்த படத்துக்கு திரைக்கதை என்பதால் இன்னும் மசாலா இருக்கும் என நம்பலாம்.
பைரவாவுக்கு இது போன்ற காப்பிக் கதை தேவலாம் என்று முடிவு எடுத்து விட்டார் போல...!