நடிகர் விஜயகாந்தின் மறைவு தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த் இறந்தபோது வெளிநாடுகளில் இருந்த நடிகர் கார்த்தி தனது அப்பா சிவக்குமாருடன் வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து தனித்தன்மையுடன் செயல்பட்டவர் விஜயகாந்த். திரைபட படப்பிடிப்பு பகுதியில் தான் சாப்பிடும் உணவைத்தான் மற்ற அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதை உறுதி செய்த விஜயகாந்த், நடிகர் சங்க கடனை அடைத்தது, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பொன்விழா எடுத்தது என அனைவரும் வியக்கத்தக்க பல செய்லகளை செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், அரசியல் திரைத்துறை என எதிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்த நிலையில், கடந்த டிசம்பர் 28-ந் தேதி காலை மரணமடைந்தார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விஷால், கார்த்தி, சூர்யா, தனுஷ், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வெளிநாடுகளில் இருந்ததால் நேரில் வர முடியவில்லை. இவர்கள் அனைவருமே தங்களது சமூகவலைதளங்களில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். தற்போது விஜயகாந்த் இறந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பும் நடிகர்கள் பலரும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது அப்பா சிவக்குமாருடன், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய கார்த்தி, கேப்டனின் இறுதிச்சடங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனது என் வாழ்நாள் முழுவதும் ஒரு குறையாகவே இருக்கும். நடிகர் சங்கத்தில் எப்போது பிரச்சனை வநதாலும் இவரைத்தான் நினைத்தக்கொள்வோம். நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ந் தேதி கேப்டனின் இரங்கல் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சிவக்குமார், இந்த மண் இருக்கும் வரை விஜயகாந்தை யாரும் மறக்க மாட்டார்கள். வருங்காலத்தில் முதல்வர் ஆக வேண்டியவர். ஆனால் இன்று நம்முடன் இல்லை. அவருடன் புதுயுகம் என்ற படத்தில் இணைந்து நடித்தேன். விஜயகாந்த் என்றவுடன் நினைவுக்கு வருவது 1996-ல் அவர் கலைஞருக்காக எடுத்த விழா தான். யாரும் உதவாத நிலையில் தனி ஆளாக நின்று, தனது பணத்தை செலவு செய்து பிரம்மாண்டமாக விழாவை நடத்தி முடித்தார்.
ரஜினி –கமல் உயரத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு இணையாக வளர்ந்த விஜயகாந்த், நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, ரஜினி கமல் இல்லத்திற்கே நேரடியாக சென்று மலேசியா கலை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தவர். நடிகர் சங்க கடன்களை அடைத்து மீட்ட இந்த நல்ல மனிதர் தற்போது நம்முடன் இல்லாதது வேதனை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.