சின்னத்திரையில் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இயக்குனர் கரு பழனியப்பன், தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், பிக்பாஸ் பரபலம் ஒருவருக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் சினேகா நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். அடுத்து விஷால நடிப்பில் சிவப்பதிகாரம், சேரன் நடிப்பில் பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், தான் இயக்கிய மந்திர புன்னகை என்ற படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமானார்.
தொடர்ந்து நட்பே துணை படத்தில் வில்லனாக நடித்த இவர், அடுத்து கள்ளன், நந்தி, டிபிளாக் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது ஆண்டவர் என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகர் மற்றும் இயக்குனராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட கரு.பழனியப்பன், சின்னத்திரை தொகுப்பாளராகவும் தன்னை நிரூபித்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜீ தமிழின் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர், கடந்த ஆண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
தற்போது ஜீ தமிழின் தமிழா தமிழா நிகழ்ச்சியை, தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், கரு.பழனியப்பன் அடுத்ததாக கலைஞர் டிவியில் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இருந்து தற்போது கரு.பழனியப்பன் விலகியுள்ளார்.
இதனால் அடுத்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜூனன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆரி அர்ஜூனன் அதன்பிறகு சில படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமாக உள்ளார். இதனால் வா தமிழா வா நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.