செல்வராகவனுக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக சூர்யா அறிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யாவின் 35வது படமான இதை, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம், வருகிற 12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு அன்று நடைபெற்றது. விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்தத் தகவலை சூர்யாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன் புரமோஷன் நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா, “செல்வராகவன் படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறேன். தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை அந்தப் படத்தைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஏற்கெனவே ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களில் சூர்யா நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.