‘வசனத்தில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் சரிபங்கா கலந்திருக்கும் பங்கு கார்த்தியே...’ என சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சூரி.
சிவகார்த்திகேயனும், சூரியும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். எழில் இயக்கிய ‘மனம் கொத்திப் பறவை’யில் ஒன்றாக நடிக்கத் தொடங்கிய இவர்கள் கூட்டணி, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘ரஜினி முருகன்’, ‘சீம ராஜா’ என்று வெற்றிகரமாகத் தொடர்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு இன்று (பிப்ரவரி 17) பிறந்த நாள். எனவே, ட்விட்டரில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் சூரி. அந்தப் பதிவில், “ஒண்ணா பொறந்த பொறப்புன்னு சொல்வாங்க இல்ல... இரட்டைப் பிள்ளையில ஒருத்தனா பொறந்த எனக்கு, அந்த வார்த்தையோட அருமை நல்லா தெரியும். வசனத்திலயும், வாழ்க்கையிலயும் சரிபங்கா கலந்திருக்கிற பங்கு கார்த்தியே... ஒண்ணா பொறந்த பொறப்பா உணர வைக்குது உங்களோட பேரன்பு. பிறந்த நாள் வாழ்த்துகள் பங்கு!” என்று தெரிவித்துள்ளார் சூரி.