சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை, சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார். நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல முகங்கள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கிரிக்கெட் பின்னணியில் இந்தக் கதை உருவாகிறது. கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் மகளுக்கும், அவருக்கு ஆதரவாக இருக்கும் அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதைதான் படம். அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கின்றனர்.