ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘காலா’ படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துவரும் படம் ‘காலா’. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் ‘காலா’ படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றுகிறார். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் நடைபெற்று வருகிறது. முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியானது. ஜனவரி மாதம் 25ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என கூறப்பட்டது. கிராபிக்ஸ் வேலைகள் முடியாததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
எனவே, பா.இரஞ்சித் இயக்கும் ‘காலா’ படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என வதந்திகள் உலாவரத் தொடங்கின. இதனை, தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அந்தச் செய்து பொய்யானது என கூறப்பட்டுள்ளது. இதனால், ரஜினி நடித்துள்ள ‘2.0’ மற்றும் ‘காலா’ படங்களின் ரிலீஸ் தேதி தெரியாமல் குழம்பி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.