நடிகை நமிதாவுக்கும், வீரேந்திர செளத்ரிக்கும் இன்று காலை திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் நமிதா. 2002ஆம் ஆண்டு வெளியான ‘சொந்தம்’ தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமான நமிதா, விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ மூலம் தமிழில் அறிமுகமானார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள நமிதா, ஹிந்திப் படத்திலும் நடித்துள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்ட நமிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். ஆனால், சில வாரங்களிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர், அதன்பிறகு ‘பிக் பாஸ்’ தொடர்பான எதிலும் பங்கேற்கவில்லை. தன்னைப் பற்றி தவறாகச் சித்தரித்துவிட்டனர் என்பதே அவருடைய கோபத்திற்கு காரணம்.
ஜெயலலிதா இருந்தபோது தன்னை அஇஅதிமுகவில் உறுப்பினராக இணைத்துக்கொண்ட நமிதா, பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். ஆனால், ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இறந்தபிறகு, அதிமுக தொடர்பான எதிலும் ஈடுபடாமல் இருக்கிறார்.
தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக ஒரு நடிகைக்கு கோயில் கட்டினார்கள் என்றால், அது குஷ்புவுக்குத்தான். அவரை அடுத்து, 2008ஆம் ஆண்டு நமிதாவுக்கும் கோயில் கட்டினார்கள் அவருடைய ரசிகர்கள். கோயம்புத்தூர் அருகே இந்தக் கோயில் அமைந்துள்ளது. தற்போது ‘பொட்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நமிதா.
நமிதாவுக்கும், அவருடைய நண்பரான வீரேந்திர செளத்ரிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வீரா, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ராதிகா சரத்குமார், சரத்குமார், காயத்ரி ரகுராம், ஷக்தி வாசு, ஆர்த்தி உள்ளிட்ட சில சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.