மெர்சல் படத்தில் வரும் சில காட்சிகளை நீக்கக் கோரி பாஜகவினர் வலியுறுத்தி வரும் நிலையில், 'மெர்சல் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். விமர்சனம் செய்வோரை மௌனமாக்கக் கூடாது. பேசும்போதுதான் இந்தியா ஒளிரும்' என கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய் மற்றும் படக்குழுவினருடன் 'மெர்சல்' திரைப்படத்தை நேற்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். இது தொடர்பான புகைப்படங்களை இயக்குநர் அட்லி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கமல்ஹாசன் மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கும்போது, உடன் இருந்தது வாழ்வின் முக்கிய தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இருக்கும் தியேட்டரில் மெர்சல் படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த கமல் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த திரையிடலின் போது விஜய், அட்லி, தேனாண்டாள் பிலிம்ஸின் முரளி, ஹேமா ருக்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்த புகைப்படத்தில், தியேட்டருக்கு வெளியே கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் போஸ்டர் இருந்தது சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மெர்சல் படத்தின் கதையும், அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதையும் ஒரே போன்று இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில், அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டை அங்கு எதற்காக வைக்கப்பட்டது என தெரியவில்லை. படக்குழுவினரை 'நாசூக்காக நக்கல்' செய்யும் விதமாக கமல் கையாண்ட யுக்தி இது என்றே கூறப்படுகிறது.