ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக தளங்களில் பரவிய தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சி நடந்த வரை அரசியல் மத்தாப்புகளை கொளுத்திப் போட்டுவந்த கமல்ஹாசன், அந்த ஷோ முடிந்ததில் இருந்து சற்று மவுனமாகவே உள்ளார். இந்த நிலையில், 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருவதாக கமலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பை அவர் தொடங்கவுள்ளாராம்.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தெலுகு திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இது குறித்த அறிவிப்பு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முறையாக அறிவிக்கப்பட்டது. ஷங்கர், தில்ராஜூ ஆகியோரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்து இதனை அறிவித்தனர்.
இந்நிலையில், 'இந்தியன் 2' படத்திலிருந்து கமல் விலகிவிட்டதாகவும், சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியானது. இச்செய்தி குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து விசாரித்த போது, "இந்தியன் 2'வில் கமல் நடிக்கவிருப்பது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது '2.0' படத்தின் பாடல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும், சூர்யா நடிப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை" என்று கூறப்பட்டுள்ளது.