பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நமிதா, ஸ்ரீ ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மிக முக்கியமாக, இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல் கொள்ளாதது ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையில் மட்டுமே பார்த்த நடிகர் - நடிகைகளின் உண்மை முகத்தைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதும் இந்த நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பாக அமைந்தன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்லா போட்டியாளர்களுக்குமே நல்ல பப்ளிசிட்டி கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு கிடைத்த பப்ளிசிட்டி, யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ‘ஓவியா ஆர்மி’ ஆரம்பித்து, அவரைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்து 10 நாட்களுக்கும் மேலாகிறது.
அடுத்த வாரம் தீபாவளி வருவதை முன்னிட்டு, ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களை வைத்து ‘தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி’யை ஒளிபரப்ப உள்ளது விஜய் டிவி. இதற்கான ஷூட்டிங், கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் அமைக்கப்பட்ட ‘பிக் பாஸ்’ வீடு செட்டப், அந்த நிகழ்ச்சியைத் தயாரித்த எண்டமோல் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பதால், இந்த நிகழ்ச்சி அதே பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ‘யெஸ் ஆர் நோ’ செட்டில் வைத்து ஷூட் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில், ‘பிக் பாஸ்’ பட்டம் வென்ற ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஆர்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா, பரணி, ஷக்தி, சுஜா வருணி, ஜூலி ஆகியோர் கலந்து கொண்டனர். நமிதா, ஸ்ரீ ஆகியோர் இதில் கலந்து கொள்ளவில்லை. மிக முக்கியமாக, இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல் கொள்ளாதது ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கமல் கலந்து கொள்ளாததற்கு, சில பல காரணங்களைச் சொல்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். முதலாவது, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தயாரித்தது எண்டமோல் நிறுவனம்தான். விஜய் டிவியில் அது ஒளிபரப்பு மட்டுமே செய்யப்பட்டது. எனவே, விஜய் டிவிக்கும், கமலுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி ஷூட் செய்ததால், கமல் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.
இன்னொன்று, கமலுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால், கடவுள் தொடர்பான இந்தப் பண்டிகைக்காக ஷூட் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள். மூன்றாவதாக, கமலுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. காய்ச்சலும், சளி - இருமலும் அவரைப் பாடாய்ப்படுத்துகின்றன. தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரால் பேச முடியவில்லை. எனவே, அவர் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.
கமல் இல்லையென்றாலும், ‘பிக் பாஸ்’ ரசிகர்களுக்கு அனைத்துப் போட்டியாளர்களையும் ஒருசேர பார்க்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்திருப்பதால், இது குஷியான தீபாவளியாகவே இருக்கப் போகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.