பிக்பாஸின் இறுதி தின நிகழ்ச்சி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது, பலரும் கணேஷ் வெங்கட்ராமன் தான் இதில் வெற்றிப் பெறப் போவதாக கருதுகின்றனர்.
இது தொடர்பாக, இந்திய எக்ஸ்பிரஸ் நடத்திய வாக்கெடுப்பில், 37 சதவிகித வாக்காளர்கள் கணேஷ் தான் வெற்றிப் பெற வேண்டும் என தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
கணேஷைத் தொடர்ந்து சினேகன் 25% பெற்று இரண்டாம் இடத்திலும், ஆரவ் 20% பெற்று மூன்றாம் இடத்திலும், ஹரீஷ் கல்யாண் 18% பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர்.
பிக்பாஸ் ஷோவில் முதல் போட்டியாளர்களில் ஒருவரான கணேஷ் வெங்கட்ராமன், பிக்பாஸ் வீட்டில் நடந்த பல பிரச்சனைகளில் கண்டும் காணாமல் இருந்தார் என அவர் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதேசமயம், மற்றவர்களிடம் காட்டும் அன்பிற்கு இணையானவர் அவரே. பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலானோர் மற்றவர்களை புறம் பேசிக் கொண்டு தான் நேரத்தை செலவிட்டனர். ஆனால், இதுவரை மற்றவர்களைப் பற்றி கணேஷ் தேவையில்லாமல் புறம் பேசியதில்லை.
அவர் இந்த ஷோவில் மொத்தமாக நான்கு அல்லது ஐந்து தடவை தான் கோபமே பட்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மற்ற போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் தான் நூறு நாட்கள் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு காரணமாக அமைந்தது. பலமுறை எவிக்ஷனில் இருந்து மக்களால் அவர் காப்பாற்றப்பட்டார்.
தற்போது கணேஷ், சினேகன், ஆரவ், ஹரீஷ் ஆகிய நான்கு பேரில் ஒருவர் தான் டைட்டில் வின்னராகப் போகிறார். கணேஷைப் பொறுத்துவரை சினேகன் மற்றும் ஆரவ் தான் கடும் போட்டியாளராக இருக்கிறார்கள், ஹரீஷால் அவருக்கு பெரிதாக சவால் இல்லை எனலாம்.
இன்று நடைபெறும் இறுதி தின போட்டியில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களான காயத்ரி, சுஜா மற்றும் ஜூலியானா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களான ஓவியா மற்றும் பரணி ஆகியோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
இன்று வெற்றி பெறும் நபர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.