கங்கனா ரனாவத் ஒரு பைத்தியம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நடிகரும், தயாரிப்பாளருமான ஆதித்யா பஞ்சோலி தெரிவித்துள்ளார்.
தமிழில் "தாம்தூம்" திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். "குயின்" படத்தில் நடித்த இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம்வரும் இவர், தனது தந்தை வயதுள்ள பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்மையில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் அளித்த பேட்டியில்,"நடிகரும், தயாரிப்பாளருமான ஆதித்யா பஞ்சோலி எனக்கு தனியாக வீடு ஒன்றை எடுத்துக் கொடுத்திருந்தார். அங்கு என் நண்பர்கள் வருவதை அவர் அனுமதிக்க மாட்டார். கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் அச்சம்பவம் நடைபெற்றது. ஆதித்யா பஞ்சோலி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அது எனக்கு புதிதாக இருந்தது. அப்போது நான் மைனர். அவரது மகளை விட ஒரு வயது இளையவள். நான் நடித்த கேங்க்ஸ்டர் திரைப்படம் வெளியாக இருந்த நேரம் அது. அவரின் தொல்லை குறித்து அவரின் மனைவியிடம் சென்று புகார் அளித்தேன். என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சினேன். இதுபற்றி என் பெற்றோரிடம் கூற முடியாது என அழுதேன். ஆனால், ஆதித்யா பஞ்சோலியின் மனைவியோ, 'அவர் இல்லாமல் நாங்கள் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறோம். இல்லையெனில் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிலரை அவர் அடிப்பார். எனவே, அவர் இல்லாதது எங்களுக்கு நல்லது' எனக் கூறி விட்டார்" என கங்கனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கங்கனா ரனாவத் ஒரு பைத்தியம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நடிகரும், தயாரிப்பாளருமான ஆதித்யா பஞ்சோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "கங்கனா ரனாவத் ஒரு பைத்தியம். என்ன செய்வது.? பைத்தியக்காரர்கள் இதுபோன்று பேசுவது உங்களுக்கு வருத்தத்தை அளிக்காதா? வேறு யாராவது அதுபோன்று பேசியது உண்டா? இந்த துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். இதுபோன்று கொடூரமாக யாரும் பேசியது இல்லை. சேற்றின் மீது கல்லைக் கொண்டு எரிந்தால் நம்முடைய ஆடைகள் தான் அழுக்காகும். கங்கனா பொய்யான தகவல்களை கூறி வருகிறார். அவர் அளித்த பேட்டியால் நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். அவர் கூறியதை நிரூபிக்க வேண்டும். அவர் மீது நானும், எனது மனைவியும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
முன்னதாக, பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் கங்கனா ரனாவத் மோதலில் ஈடுபட்டார். ஒரு பேட்டியின்போது, ஹ்ரித்திக்கை தன் முன்னாள் காதலன் என்று, கங்கனா குறிப்பிட்டார். இதற்கு, ஹ்ரித்திக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தனக்கு ஹ்ரித்திக் தொடர்ந்து, பல்வேறு இ - மெயில்களை அனுப்பியதாகவும், நாங்கள் காதலித்து வந்தோம் என்றும் கங்கனா கூறினார். மேலும், தன்னுடைய தனிப்பட்ட இ - மெயில் கணக்குக்குள் புகுந்து, அதிலிருந்த தகவல்களை, ஹ்ரித்திக் அழித்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இது நிலுவையில் உள்ள நிலையில், அடுத்த வழக்கை சந்திக்க கங்கனா தயாராகி விட்டதாக தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.