நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனை மர்ம நபர்கள் ஸ்குரூட்ரைவரால் குத்தியுள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
'வாயை முடி பேசவும்', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர், வருண் மணியன். இவருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆனால், சில காரணங்களால் நிச்சயத்தோடு அவர்களது காதல் பிரிந்தது.இதனால், திருமணமும் நின்றுப் போனது.
இதைத் தொடர்ந்து, த்ரிஷா படங்களில் நடிப்பதில் மீண்டும் பிஸியானார். இதையடுத்து வருண் மணியனுக்கும், மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமியின் பேத்தி கனிகா குமரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில், வருண் மணியன் அவரது அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளார். தனது அலுவலக லிஃப்ட்டில் அவர் சென்றபோது, லிஃப்ட்டினுள் இரண்டு மர்ம நபர்கள் திடீரென புகுந்து, ஸ்குரூட்ரைவரால் வருண் மணியனைத் தாக்கியுள்ளனர். அவர் தடுக்க முயற்சிசெய்துள்ளார். இருப்பினும் அவர்களுடைய தாக்குதலில் வருன் மணியன் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக, காவல்துறையினர் இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர்.