பிக்பாஸ் ஷோவில் போட்டியாளராக இருந்த நடிகர் பரணியை கார்னர் செய்த மற்ற போட்டியாளர்கள், அவரை தனித்தே வைத்திருந்தனர். இதனால், அதிக மனஉளைச்சலுக்கு ஆளான பரணி, பிக்பாஸ் இல்லத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இதனால், அவர் விதிமுறைகளை மீறியதாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். போட்டியின் போது சிலர், பரணி குறித்து சில மோசமான வார்த்தைகளை உபயோகித்தனர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியின் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் லீட் ரோலில் நடித்த நடிகர் அமித் பார்கவ், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நான் இன்று ஃபேஸ்புக்கில் லைவ் செய்வதற்கு ஒரேயொரு காரணம் இது தான். 2016-ல் 'அச்சம் தவிர்' என்ற நிகழ்ச்சியில் நானும் பரணியும் ஒண்ணா கலந்துக்கிட்டோம். அந்த ஷோ சிறிது காலம் நடந்தது. அப்போது சில வாரங்கள் நான் பரணியுடன் நெருங்கி பழகினேன். இதனால், பரணி குறித்து எனக்கு ஓரளவிற்கு தெரியும்.
நேற்று நடந்த பிக்பாஸ் ஷோவில், 'பரணி வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என சிலர் தெரிவித்தனர். இது என்னை மிகவும் பாதித்துவிட்டது. பரணி உண்மையில் பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ளக் கூடியவர். அவர் யாரை பற்றியும் தரக்குறைவாக பேசியது கூட கிடையாது. அவர்கள் எதன் அடிப்படையில் இப்படிச் சொன்னார்கள் என தெரியவில்லை. பரணி எனக்கு நண்பரா இல்லையா என்பதை என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால், பரணி குறித்து எனக்கு ஓரளவு தெரியும் என்பதால், இதனை இங்கே பதிவு செய்வதை எனது கடமையாக கருதுகிறேன்.
அவருக்கும் பொண்டாட்டி, பிள்ளைகள் இருக்கிறார்கள். மற்ற போட்டியாளர்கள் பரணியைப் பற்றி இப்படி தரக்குறைவாக கூறுவதால், பரணி வெளியே சென்றால், மக்கள் அவரை எப்படி பார்ப்பார்கள்? பரணிக்கு யாருமே சப்போர்ட் செய்யவில்லை. அந்த நிகழ்ச்சியில் சிலர், ' இங்கு பெண்களின் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு' என்கிறார்கள், சிலர் எங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது' என்கிறார்கள்.
ஒரு வீட்டில் அனைவரும் சேர்ந்து ஒருவரை மட்டும் கேவலமாக பேசினாலோ, தனிமைப்படுத்தினாலோ அவரால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? நான் சர்டிஃபிக்கெட் கொடுக்க நினைக்கவில்லை. ஆனால், இதை சொல்ல வேண்டியது எனது கடமை. பரணியின் குடும்பம் ரோட்டில் சென்றால், மற்றவர்கள் யாரும் பரணியை பற்றி தவறாக பேசக்கூடாது என்பதற்காக தான் இதை சொல்கிறேன்.
நாலு சுவற்றிற்குள் இதை பேசியிருந்தால் கூட பரவாயில்லை. ஒட்டுமொத்த தமிழகமும், உலகம் முழுக்க உள்ள தமிழகர்களும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மற்ற போட்டியாளர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். பரணி அந்த வீட்டை விட்டு வெளியேறியது உண்மையில் நல்ல விஷயம் தான்.
பரணி ஈஸ் இன்னொசென்ட்!" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.