ஆர்.சந்திரன்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி, இந்தியாவின் மென்பொருள், மருந்து, நுகர்பொருள் சந்தைகளைத் தாண்டி, இப்போது ஆன்லைன் வணிக சந்தையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.! இந்திய ஆன்லைன் வணிக நிறுவனம் என பெயர்பெற்றுள்ள ஃபிளிப் கார்டின் 40 சதவீத பங்குகளை வாங்க, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இது, மற்றொரு பன்னாட்டு ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான், தனித்து இந்தியாவில் வலுப்பெறுவதற்கு எதிரான நடவடிக்கை என சொல்லப்படுகிறது.
இதற்காக, தற்போது ஃபிளிப் கார்ட் நிறுவனத்தின் நிகர மதிப்பு, நிதி கையிருப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தும் செயல் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வணிக நாளேடுகள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே, ஃபிளிப் கார்டின் 20 சதவீத பங்குகளை, ஜப்பானிய 'சாப்ட் பேங்க் குழுமம்' கடந்த ஆண்டு வாங்கியது. அதேபோல, அமெரிக்க மற்றும் சீன நிதி நிறுவனங்களும், மைக்ரோசாப்ட், ஈ பே போன்றவையும் கூட ஃபிளிப் கார்டின் பங்குகளை வாங்கி வைத்துள்ளன. அதனால், பெரும் வணிக திடட்டத்தோடு களமிறங்கும் வால்மார்ட் மூலம் ஃபிளிப் கார்டில் இந்தியர் வசமுள்ள பங்குகள் முழுவதும் வாங்கப்பட்டு விடுமா.... எதாவது மிச்சமிருக்குமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் நிதித்துறை நிபுணர்கள்.