ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஃபீச்சர் மாடல் ஃபோனின் ஜியோஆப் ஸ்டோரில் தற்போது ஃபேஸ்புக் ஆப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
டெலிகாம் மற்றும் மொபைல், ஸ்மார்ட் போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஜியோ போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஃபீச்சர் ரக ஃபோன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை குறி வைத்து ஜியோ நிறுவனம் வெளியிட்ட இந்த ஃபோன்களில் எண்ணற்ற இணைய வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ரூ. 1500 க்கு டெபாசிட் தொகையை செலுத்திவிட்டு ஜியோ போனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதே போல் மாதந்தோறும் ரூ.153 செலுத்தி எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் கூறியிருந்தது. கோடிகணக்கான 2ஜி வாடிக்கையாளர்களை பெறும் நோக்கில் முதற்கட்ட விற்பனை நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ஆஃப்லைன் மற்றும் மொபிக்விக் வாலெட் இணையதளத்தில் இந்த ஃபோன்கள் விற்பனையாகி வருகின்றன.
தற்போது, இந்த மொபைலில் ஜியோஆப் ஸ்டோரில் , உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் செயலி இடம்பெறம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கூடிய விரைவில், மற்ற ஸ்மார்ட்ஃபோன்களில் கிடைக்கும் வாட்ஸ் அப், ட்விட்டர் சேவைகளையும் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மொபைலுக்கான ரீசாட்ர்ஜ் திட்டங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.153 க்கு ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய்வற்றை 28 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.49 ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்களுக்கு செயல்படும் வாய்ஸ் கால் சேவை மற்றும் மொத்தமாக 1ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.