டெலிகாம் சந்தையில், கடந்த சில மாதங்களாக கடுமையான போட்டியை வழங்கி வரும் பி.எஸ்.என் எல் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிரமிக்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.
மேலும், ஏர்செல்லின் வீழ்ச்சிக்கு பிறகு சுமார், 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் ஐபிஎல் சீசன் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மற்ற டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் போன்றவை ஐபிஎல் தொடரைக் கொண்டு சில ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக ஜியோ நிறுவனம், ஜியோ கிரிக்கெட் பெளே அலாங்’ மற்றும் “ஜியோ தண் தானா லைவ்” என இரண்டு பரிசுப் போட்டியை அறிவித்தது. அத்துடன், ரூ. 251 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 51 நாட்கள் செயல்படும் 102 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் மத்தியில்,இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி,ரூ. 248 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 153 ஜிபி டேட்டா வழங்கப்படும். 51 நாட்களுக்கு செயல்படும் இந்த திட்டத்தின் ரீசார்ஜ் இனறு(7.4.18) முதல் தொடங்கி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.