பிஎஸ்என்எல் நிறுவனத்தின், 4ஜி சேவையில், வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம், அன்லிமடெட் பீரிபெய்ட் ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெலிகாம் சேவையில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை நாள்தோறும் அறிவித்து வருகின்றன. ஜியோவின் வருக்கைக்கு பின்னர், பெரும்பாலான மக்கள் 4ஜி சேவைக்கு மாறியுள்ளனர்.
இந்த மாற்றத்தை புரிந்துக் கொண்ட நிறுவனங்கள் 4ஜி ரீசார்ஜ் திட்டங்களில் நம்பமுடியாத பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், கேஸ்பேக் ஆஃபர், ரீசார்ஜ் கூப்பன்கள், கிஃப்ட் வவுச்சர்கள் ஆகியவை ஜியோவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆஃபர்களேயாகும். ஜியோவை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களில் விலைக்குறைப்பு , அதிக டேட்டா வசதி போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது.
இந்த போட்டியில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி இணைய சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம், பீரிபெய்ட் ப்ளான்களில் அன்லிமடெட் வசதியை வரும் மார்ச் முதல் வழங்கவுள்ளது. இதன்படி, ரூ. 99 க்கு ரீசார்ஜ் செய்தால் 26 நாட்களுக்கு அன்லிமடெட் டேட்டா, வாய்ஸ் காலிங் சேவையை பெறலாம். அதே போல் ரூ. 319 க்கு ரீசார்ஜ் செய்தால், 90 நாட்களுக்கு அன்லிமடெட் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வரும் மார்ச் மாதம் முதல், இந்த ப்ளான் அறிமுகமாகிறது.
தற்போது, தமிழகம் உட்பட பல இடங்களில் ஏர்செல் சேவை முடங்கியுள்ளது, பிஎஸ்என்எல்லின் இந்த புதிய அறிவிப்பால், ஏர்செல் வாடிக்கையாளர்கள் இடம்மாற வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.