ஆர்.சந்திரன்
வாட்ஸ்அப் மூலம், "அடிடாஸ் ஷூ நிறுவனம் தனது 93வது ஆண்டையொட்டி, 3 ஆயிரம் பேருக்கு இலவச ஷூக்களை வழங்குகிறது. அதற்கு நீங்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள்" என, உங்களுக்குச் செய்தி வந்தால் கவனம் தேவை. காரணம், அப்படி எந்த திட்டத்தையும் தாங்கள் அறிவிக்கவில்லை என்று அடிடாஸ் நிறுவனம் கூறியுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகளில், மேற்கண்ட தகவலைப் பார்த்து, தங்களைப் பற்றி விவரங்களை பகிர்ந்து கொண்டு பலர் ஏமாந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த தகவல் தொடர்ந்து மற்ற நாட்டின் பகுதிகளுக்கும் பரவி வருவதாகத் தெரிகிறது. எனவே, இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, அடிடாஸ் சார்பில் பேசிய அதன் உயரதிகாரி லாரன் ஹாக்மேன், "இப்படியான போலித்தகவல் உலா வருவது குறித்து எங்களுக்கும் செய்தி வந்தது. ஆனால், இது மோசடிப் பேர்வழிகளின் வேலை. அப்பாவி மக்களின் தனிப்பட்ட விவரங்களைத் திரட்டி, அதைக் கொண்டு பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கையாகத் தெரிகிறது. இதை நம்ப வேண்டாம்" என கூறியுள்ளார்.
எளிதாக ஏராளமானவர்களை எட்டலாம் என்பதால், வாட்ஸ் அப் மூலம் பல நேரங்களில் வதந்திகளையும் சில சமூக விரோதிகள் பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிந்ததே. எனவே, இன்று யாரிடமிருந்து எந்த தகவல் வந்தாலும், அதன் அடிப்படையில் செயல்பட தொடங்கும் முன், அதன் ‘மெய்ப் பொருள்’ காண்பது அவசியம் என்பதே சைபர் எனும் மின்னணு தகவல் தொடர்பியல் / இணையத் தொடர்பு துறையில் இயங்கும் நிபுணர்களின் கருத்து.