கல்லூரி காலங்களில் கையில் பணம் இல்லாவிட்டால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், தொழில் முறையுடன் கூடிய பல திறமைகள் நம்மிடையே இருந்தால், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நாம் சம்பாதிக்க முடியும். அதில், ஈஸியான 3 வழிகளைக் காணலாம்.
1. டியூஷன் எடுக்கலாம்:
பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது மிகவும் நல்ல யோசனை. ஏனெனில், இதன் மூலம் பணம் கிடைப்பது மட்டுமல்லாமல், எப்போதும் உங்களை அப்டேட்டாகவும், அடிப்படை பாடங்களை ஞாபகம் வைத்திருக்கவும் முடியும். பள்ளி குழந்தைகளுடன் பழகுவதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியும் அடையலாம். மற்றவர்களுக்கு சில விஷயத்தை புரிய வைக்கும் திறனை இதன்மூலம் வளர்த்துக் கொள்ளலாம். ஒரு விவாதத்தை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக நீங்கள் எப்படி எடுத்துச் செல்கிறீர்கள் என்பதை அறியலாம்.
2. பகுதிநேரமாக எழுதலாம்:
நீங்கள் நன்றாக எழுதும் பழக்கம் உடையவராக இருந்தால், செய்தித்தாள்கள், இதழ்கள், ஆகியவற்றில் பகுதிநேரமாக, அதாவது ஃப்ரீலான்சராக எழுதி அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம். காலையில் சென்று அலுவலகத்தில் அமர வேண்டிய தேவை இதில் இல்லை. எழுதுவதில் உள்ள சில நுணுக்கங்களை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
3. பங்கு சந்தை முதலீடு:
கல்லூரி காலத்தில் இளம் வயதிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, பணத்தை சேமிப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக அமையும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சூதாட்டமல்ல. திறன்வாய்ந்த பொருளியல் நிபுணரின் ஆலோசனையுடன் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பெற முடியும். பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், வணிகம், தொழில் சார்ந்தவற்றின் மீதான் அறிவு வளர்ந்து அதன்மீது ஆர்வம் கூடும்.