திருவனந்தபுரத்தில் உள்ள தென் இந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் இன்று (திங்கள்கிழமை) அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையானது காரக்கோணம் தேவாலயத்தால் நடத்தப்படும் டாக்டர். சோமர்வேல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியிலும் நடந்தது.
தொடர்ந்து, சிஎஸ்ஐ தென் கேரள பிஷப் தர்மராஜ் ராசலம், மருத்துவக் கல்லூரி இயக்குனரும், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்டவருமான டாக்டர். பென்னட் ஆப்ரஹாம் மற்றும் சிஎஸ்ஐ செயலாளர் பிரவீன் வீட்டிலும் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.
முன்னதாக சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் முறையான இரசீது வழங்காமல் மாணவ- மாணவிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்தது.
இதற்கிடையில் 2018ஆம் ஆண்டு 11 கல்லூரி மாணவர்கள் போலி சாதிச்சான்றிதழ் சர்ச்சையிலும் சிக்கினர். இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
கல்லூரியில் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான வழக்கை மாநில காவல் துறையினர் விசாரித்து வந்தனர். அப்போது போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.